மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

இந்த வார்த்தைகள் எனக்கு பாஞ்சாலியையும் பாரதியையும் நினைவு படுத்துகின்றன.கௌரவர் சபையில் பாஞ்சாலி துகிலுரிக்கப்பட்டபோது, மானம் காக்க கண்ணனை அழைக்கிறாள். துச்சாதனன் கையில் சிக்கிய ஆடையை ஒரு கையில் பிடித்துக்கொண்டு அபயக்குரல் எழுப்புகிறாள். அதற்கு முன்பே பலவாறாக சபையினரிடம் நியாயம் கேட்கிறாள். அத்தனையும் தோல்வியடைந்த மன நிலையில் கடைசியாக கண்ணனை அழைக்கிறாள். ஏற்கனவே கொண்டவர்களும் கைவிட்ட நிலையில் நைந்து போன மனம் , கண்ணால் சுற்றியுள்ளவர்களின் கடைசி நிமிட மனமாற்றத்தை தேடி , வாயால் கண்ணனை அழைத்து , கையால் மானத்தை காக்கும் முயற்சியுடன் துச்சாதனனை எதிர்கொள்கிறாள். வாயோ பலவாறாக கண்ணனை புகழ்கிறது. " நம்பி நின்னடி தொழுதேன்- என்னை நாணழியாதிங்கு காத்தருள்வாய்" இன்னும் பலவாறாக போற்றுகிறாள். நேரம் கடக்கிறது, ஓராடையுடுத்தி நின்றவளின் இடையில் கடை சுற்றாய் இருந்த ஆடையும் இழுக்கும்போது, இனி அவனன்றி நம்மை யாரும் காக்க முடியாது என்று தோன்றிய வினாடி ஆடையை தடுத்து இருந்த கை உயர்ந்தது. தலைக்கு மேல் இரு கரம் கூப்பி கண்ணனை அழைக்கிறாள். . உட் சோதியிற் கலந்தாள்; அன்னை உலகம் மறந்தாள்; ஒருமையுற்றாள். பிறகு வருகிறது கண்ணபிரான் அருளாலே.... வண்ண பொற் சேலைகளாம்- அவை வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே... இதுதான் சரணகதி. அப்போது வந்த கண்ணன் கடைசிவரை காத்து நிற்கிறான். இது ஆன்மீகத்தின் ஒரு பாதை. ஆனால், கட்டுரை அதை பற்றியல்ல.


பிறகு பாரதியின் "நின்னை சரணந்தேன் " இதுவும் ஒருவித சரணகதிதான். எனக்கு உன்னையன்றி உலகில் வேறு கதியில்லை என்று
துன்பமினியில்லை, சோர்வில்லை,தோற்பில்லை அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட... பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் கவலைகள் என்னை தின்னத்தகாது என்று நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா! என்கிறார். இது காதலின் ஏழாம் நிலை (?). ஆனால் சரணடைந்த மனதை உதைத்துத் தள்ளும் அளவிற்கு எந்த கண்ணம்மாவும் கொடு மதியுடையோராக இருப்பதில்லை. முடிவு , கண்ணன் ஆட்கொண்டதுபோல ( விவாகரத்து... நீதிமன்றம் என்று அலையாமல்) கண்ணம்மாவும் ஆட்கொண்டாள். ஆனால் இது இனிய இல்லறம் பற்றிய கட்டுரையும் அல்ல.


மூன்றாவது சரணாகதி என்னுடைய பார்வையில். சரணாகதி என்பது முழு ஈடுபாடு என்று தெரிகிறது அல்லவா. இப்படி கொஞ்சம் யோசித்துப் பார்க்கலாமே.... முழுஈடுபாட்டுடன் ஒரு செயலை செய்தால் அது முழுமையடையும். அதாவது ஒரு செயல் வெற்றி பெற முழு கவனம் வைக்க வேண்டும்.
பசி நோக்கார் .... கண் துஞ்சார்... என்றெல்லாம் அய்யன் சொல்வது இதனைத்தான். மனதின் ஒத்துழைப்பு மிக அவசியம். நிறைய சந்தர்ப்பங்களில் நாம் நினைத்தது சரியாக நடக்கும் - முக்கியமாக தோல்வியுறுவோமோ என்று அஞ்சினால் அப்படியே நடந்துவிடும். இந்த பயம் எப்போது தோன்றும்? நாம் செய்ய இருக்கும் காரியத்தின் முழு விவரமும் நமக்கு கிட்டாத போது நம்மை நம்புவதற்கு நம்மாலேயே முடியாது. அரைகுறையாக ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்ட விவரங்கள் -- ரிஸ்க் என்று எச்சரிக்கை மணியடித்துவிட அந்த காரியத்தை அப்படியே கைவிட்டுவிடுவோம். இதில் முழு ஈடுபாடு எங்கே வரும்?

   இன்னும் கொஞ்சம் யோசிக்கலாமே. "இந்த விசயம் ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டம்" இந்த வார்த்தையின் விளைவு மேற்கொண்டு இதனை தொடராமல் இருப்பது அல்லது அரைமனதோடு செய்து தோற்றுவிடுவது. " அப்பவே சொன்னேன்ல" என்று அருள்வாக்கு வேறு சொல்லிக்கொள்வோம். இதற்கு இன்னொரு பக்கமும் உண்டு, ஏன் இதில்
 வெற்றி பெற முடியாது என்று கேள்வி எழுப்புங்கள். உடனேயே வரிசையாய் காரணங்கள் தோன்றிவிடும். இதுதான் பிரச்சினை என்றால் அதற்கு தீர்வும் நாம் கண்டுவிட்டால் வெற்றி பெறமுடியும் அல்லவா?. தோல்வியின் காரணங்கள் புரிவதே வெற்றியின் பயணத்தை ஆரம்பித்துவிடாதா?. காதலுக்கு தாய்மாமன் தடை என்றால் " தூக்கிடலாமா....? " என்று தோன்றுகிறதே தவிர காதலை விடவா செய்கிறார்கள். . இப்போது சட்டென்று புரிந்திருக்குமே நாம் செய்யும் செயலை காதலிக்கக் கற்றுக்கொண்டால் தோல்வி கிடையாது என்று. இதனை இன்னும் சீரிய முறையில் ஆலோசித்து வெற்றி தேவதையின் அருளை பெறமுயற்சிக்கலாமா? 

7 comments:

சரணாகதிக்கு முழு உதாரணமாய் ஹனுமனை சொல்லலாம். அவரைப் பொறுத்தவரை தன்னை முழுவதுமாய் ராமரிடம் ஒப்படைத்து விட்டார்.

கடைசி பத்திக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் புரியலையே

நானும் வந்துட்டேன்...

எந்த செயலிலும் வெற்றிபெற மனம் 'முழுஈடுபாட்டுடன்' இருக்கவேண்டும். சரணடைந்தாலும் சரி அந்த செயலை காதலித்தாலும் சரி முழுஈடுபாடு கிட்டிவிடும் அல்லவா? total commitment . அப்படியென்றால் சரணாகதியும் காதலும் ஒன்றா என்று சந்தேகம் வரும். ஒன்றுதான், கடவுளை ஆண்பாவமாக பார்ப்பதே உயரிய பக்தி. " அலை பாயுதே " பாடலும் அதைதான் சொல்கிறது. கருத்து சொல்லுங்கள் திரு.எல்.கே.

வணக்கம் திரு.மனோ. வருகைக்கு நன்றி.

இது காதலின் ஏழாம் நிலை (?). //
முழுஈடுபாடு வெற்றிக்கு வித்து. சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

பாராட்டிற்கு நன்றி ராஜேஸ்வரி